Total Pageviews

Tuesday 14 February 2012

சித்தர்களின் கொள்கை


முதலில் சித்தர்கள் ' காடே திரிந்தென்ன' 'கந்தையே உடுத்தென்ன'' ஒடே எடுத்தென்ன ' என்று ஓரிடத்திலும் தங்காமலும் எதனையும் சொந்தமெனக் கொள்ளாமலும்-நாடோடி வாழ்க்கை வாழ்ந்தாலும் அவர்கள் சமுதாயத்தைப் பற்றிய முழுமையான கண்ணோட்டம் கொண்டவர்களாக இருந்தனர்.மேலும் கோயில் வழிபாட்டு, வேள்விகள், சாத்திரங்கள் ஓதுதல் போன்றவற்றைச் சாடியும் மூட நம்பிக்கைகள்,பழக்கவழக்கங்களைக் கண்டித்திருப்பதும் அவர்களுக்கு சமுதாயத்தின் மேல் இருந்த ஈடுபட்டைக் குறிக்கிறது.

அகத்தில் கண்கொண்டு ஆண்டவனை உள்ளத்தில் கண்டு மகிழ்வதே உண்மையான பேரானந்தம் எனக்கருதி வாழ்ந்தனர். ஊனுடம்பாகிய ஆலயத்தில் உள்ளமாகிய பெருங் கோயில் சிவனைக் கண்டு  தெள்ளத்தெளிந்திருக்க வேண்டும் என வற்புறுத்தினர். தனி மனிதன்கள் அனைவரும் அக நாட்டம் கொண்டு , புற வழிப்பாட்டை வெறுத்து வாழ்ந்தால் சமுதாயம் ஏற்றத்தாழ்வு அற்றதாகிவிடும் என்பதை உணர்ந்தனர். என்னுள்ளே இருக்கும் ஆண்டவன்தான் பிற மனிதர்களிடமும் உறைகிறான் என்ற உணர்வு ஏற்படின் அனுபவ ரீதியாக அனைவரும் சமம் என்ற உண்மை புலப்படும்.

நம் உள் இறைவன் இருக்கிறான் என்றாலும் அவனை அவன் துணையின்ற அறிய முடியாது. சூரியனைச் சூரியனின் ஒளியைக் கொண்டுதான் தெரிந்துக் கொள்ள முடியும் அதுபோல் இறைவனையும் அவன் அருளினால்தான் தெரிந்துக் கொள்ள முடியும்.இறைவனின் அருளினால் இறைவனைக் காணும் அறிவைப் பெறுவது சித்து.! இந்த இறை அருளைப் பெற்றவர்கள் சித்தர்கள்.

சித்தர்கள் தாங்கள் இறை அனுபவத்தைப் பெற்றதுடன் மக்களும் தாங்கள் பெற்ற இறை அனுபவத்தைப் பெறுவதற்காகத் தங்கள் இறை அனுபவங்களை எல்லாம்பாடி வைத்தார்கள்.சித்தர்கள் தம் உள் இருக்கும் இறைவனை உணர்ந்தவர்கள். அதனால் சமயம், சடங்கு முதலியவற்றைக் கடந்து நிற்கிறார்கள். அன்பும் அருளும் நிறைந்தவர்கள்.அதன் காரணமாக மனிதர்களின் முன்னேற்றம் ஒன்றையே கருத்தில் கொண்டிருக்கிறார்கள். அதற்காகவே தாங்கள் பெற்ற அருளை வழங்கி வருகிறார்கள்.

உலகில் மற்ற எந்தப் பகுதிகளையும் விட இந்தியாவில்தான் ஏராளமான சித்தர்கள் இருந்தார்கள்; இருக்கிறார்கள்.தமிழ் நாட்டில் திருமூலரில் இருந்து இந்தச் சித்தர் பரம்பரை நீண்டுக்கொண்டே இருக்கிறது.
இறைவனைத் தம் உள்ளத்தில் கண்ட சித்தர்களைக் காலவரை அறைக்குள் அடக்கிவிட முடியாது.

அவர்கள் பல நூறு ஆண்டுகள் கூட வாழக்கூடியவர்கள்.சித்தர்களைப்பற்றிய உண்மையைப் புரிந்ததுகொண்டவர்களைத் தவிர மற்றவர்கள் அவர்கள் புரிந்துக் கொள்ளவது சற்று சிரம்மம் ஆனாலும், எல்லையற்ற ஆற்றலைப் பெற்ற சித்தர்கள் பலர் இன்னும் இருக்கிறார்கள்.

சித்தர்கள் ஆழ்ந்த தெய்வ பக்தி நிரம்பியவர்கள். ஆயங்கள் அனைத்தும் புற வடிவில் ஆண்டவனைக் கண்டு வழிபட எழுந்தவை. பூசைகளுக்கு தடங்கல் ஏற்பட்டால் வளம் குன்றி, மன்னவர்களூக்கு தீங்கு ஏற்பட்டு கன்னங்களவுகள் மிகுந்திடும் என்பார் திருமூலர் எனவே ஆலய வழிபாடு அவசியம். ஆகவே சித்தர்கள் மானிட ஆன்மாக்கள் செம்மையுறலயங்கள் அமைத்து சிவசமாதி பெற்று அருவமாக இருந்து அருள்பாலித்து வருகிறார்கள்.

உடம்பின் நுட்பங்கள், இயல்புகள், மனதின் தன்மைகள், தாரங்கள், காயசித்தி, உபாயங்கள், வைத்தியம் முறைகள் ஆகியவற்றைப் பார்க்கும் போது சித்தர்கள் தங்களது பாடல் வாயிலாக சமுதாயத்தில் மக்கள் " மெய்யுணர்வு " அல்லது " மெய்யறிவு " பெற்றுத்திகழ வேண்டும் என்பதில் கருத்தாய் இருந்தனர். எந்தச் சமுதாயத்தில் மெய்யுணர்வு பெற்ற 'மேன்மக்கள்' அதிகம் உள்ளரோ அச்சமுதாயம் சீர்மைபெறும் என நம்பினர். உடல் தத்துவம், மனத்தத்துவம் விஞ்ஞான தத்துவம், மெய்யானதத்துவம் ஆகிய யோக நெறிமூலம் பாதுகாக்கப்பட்டன.

" இந்த உடம்புள்ளே தெய்வ தரிசனம் பெற்று இறை ஆற்றலை இந்த உடம்புனுள்ளே வளர்த்து, உலகிற்குத் தங்கள் யோக சாதனையினால் ஒளியூட்டி சமுதாயத்தைப் பாதுகாப்பதே சித்தர்களின் குறிக்கோள்"
" யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் " என்பதே சித்தர் இலக்கியத்தின் அடிப்படை உண்மை.

சித்தர்கள் சித்தத்தை வென்றவர்கள் எனவும் எண்ணிய காரியத்தில் சித்தி அதாவது வெற்றி பெற்றவர்கள். தம் உயரிய பண்பினால் சித்தனாம் இறைவனைக் கண்டு இரண்டறக் கலந்தவர்கள். இச் சித்தர்களின் செயல்களிற் சிலர், மந்திரத்தினால் விளைவதைப் போன்று தோன்றினாலும், அவர்கள் மந்திரம், தந்திரம், மாயை ஆ கியவற்றினைப் பயில்பவரோ , கடைப்பிடிப்பவரோ அல்லர். தன் ஆ ன்மீக வளர்ச்சியினால் அறிவியல் சாதனைப் புரிந்த இச்சித்தர்களை அறிவியலுக்கும், ஆன்மீகத்திற்கும் அமைந்த பாலங்கள் எனக் கூறுவது பொருந்தும்.

சித்தர்கள் சாதி பேதங்களை வன்மையாக கண்டித்தனர். அகப்பேய்ச்சித்தர்" சாதிபேதமில்லை அகப்பேய் தானாகி நின்றவர்க்கே " என்று கூறுவதன் மூலம் இறைவனை தன்னுள்ளே கண்டவர்க்கு சாதிபேதம் இல்லை எனக் குறிப்பிடுகிறார்.

" எவ்வகையாக நன்னீதி- அவை
எல்லாம் அறிந்தே எடுத்து நீ போதி
ஒவ்வா வென்ற பல சாதி- யாவும்
ஒன்றென்று அறிந்தே யுணர்ந்ததுற வோதி..." என்பார்.

" கஞ்சாப் புகை பிடியாதே - வெறி
காட்டி மயங்கிய கட்குடியாதே...! "
அஞ்சவுயிர் மடியாதே - பத்தி
அற்ற அஞ்ஞானத்தில் நூல் படியாதே ..." என்றும்.பட்டினத்தார்,

" பொய்யை ஒழியாய்ப், புலாலை விடாய் காளத்தி
ஐயரை எண்ணாய்; அறம் செய்யாய் - வெய்ய
சினமே ஒழியாய்; திருவெழுத்தைந்தும் ஓதாய்;
மனமே உன்ககென்ன மாண்பு...!

என்று பாடுவதிலிருந்து தனி மனித அறனை வலியுறுத்துகிற பாங்கு புலப்படுகிறது. அறம் ஓங்கும் போது சமூகம் மேன்மையடைகிறது.

மருத்துவ நூல், புவி நூல்,கணித நூல்,மந்திர நூல், யோக நூல்,சோதிட நூல் எனப் பல தனி நூல்களை எழுதியமை போன்று சமுதாய நூல் எனத தனி நூல் எழுதவில்லை எனினும், எல்லாச் சித்தர் பாடல்களிலும் சமுதாயம் செம்மைப்பட வேண்டும் என்ற உரிய நோக்கம் பிரதிபலிப்பதைக் காணலாம். சான்றுக்குச் சில எடுத்துக்காட்டுகள் தரப்பட்டுள்ளன.

தேடுகின்ற புராணமெல்லாம் பொய்யேயென்றேன்
சிவன் பிரமன் விஷ்ணுவின் பெயர்களென்றேன்
ஆடுகின்ற தீர்த்தமெல்லாம் அசுத்தமென்றேன்


- அகஸ்தியர் சூத்திரம் :30

மூகருடன் பழகாதே பொய் சொல்லாதே
பின்னே நீ திரியாதே பிணங்கிடாதே
பேசாதே யொருவருக்கு மிந்த நூலை

- நந்தீஸ்வரர் சூத்திரம் :100

கள்ளனென்ற சீடரை நான் தள்ளச் சொன்னேன்
பொய்யான பொய்யுரைக்கும் புலை சண்டாளன்
பொருளீந்து பிறர்க்குரைக்கும் பாவச்சீடர்
ஐயாவென்ற அடுத்தாலும் தள்ளச் சொன்னேன்
அஞ்ஞானி யாவர்களுடன் பேச்சொன்னாதே

- தட்சணாமூர்த்தி பூரண பூசாவிதி 200

தவளையைப்போல வேதமெல்லாம் சாற்றுகின்றீர்
வந்தவழி அறியார்க்கு மந்தரமேது

- ஞானவெட்டியான் 1500

சமுதாயத்தில் காணப்படும் பயனற்ற பொருளற்ற , சாதி, சாத்திரம், சடங்கு, சமயம், போன்ற பாகுபாடுகளை அஞ்சாமல் சாடியவர்கள் சித்தர்கள். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற வள்ளுவரது அரிய கொள்கையின் உண்மையை உணர்ந்தவர்களாக இவர்கள் விளங்குகிறார்கள்.

ராமலிங்கசுவாமிகள் ஆன்ம நேய ஒருமைப் பாட்டுரிமை என்னும் தொடரால் அதனை விளக்குகிறார். சாதி - சாதிக்குள் சாதி -எனத் தம்மைத் தாமே பகுத்து, பகைமையையும் பிரிவினையும் வளர்த்துக்கொண்டே காலத்தில் துணிந்து அவை பொய் எனச் சாடிய துணிவு குறிக்கத்தக்கது, மக்களைப் பிரிக்கும் மாயையாகிய அச்சாதியை ஒருமித்த குரலோடு சித்தர்கள் தாக்குகின்றார்கள்,

இப்பிரிவினையை மிகுதிப்படுத்துவது சாத்திரமும் சடங்கும் ஆகும். சாதினால் தீமையே அன்றி அணுவளவும் நன்மை இல்லை என்பது சித்தர்கள் கருத்து. " கண்மூடிப் பழக்கமெல்லாம் மண் மூடிப்போக " எனப் பெரிதும் வருந்தி சாடியவர் இராமலிங்க சுவாமிகள்.

சித்தர் சமுதாயத்திற்க்கு செய்த மிகப்பெரிய தொண்டு ஒன்று என்றால் அது கடவுள் பற்றிய கொள்கையை ஆலயங்களில் மட்டும் இறைவன் இருப்பதாக எண்ணிக்கொண்டு இருந்த காலத்தில்- கண் மூடித்தனமான சம்பிரதாயங்களில் தமது பொழுதையும் ,பொருளையும் விரயம் செய்து வந்த காலத்தில் மிக அரிய கொள்கையை உலகுக்கு உணர்த்தினார்கள்.

மலை, கடல், முதலியவற்றால் பிரிக்கப்பட்ட மனிதன் , மேலும் தனக்குள் சாதி, சடங்கு முதலியவற்றால் பிரித்துக் கொண்டான். இப்பிரிவினைக்கு உரம் ஊட்டுவது போல் கடவுட் கொள்கை சமயமும், சேர்த்துகொண்டான். '" உங்கள் தெய்வம் ,எங்கள் தெய்வம் என்று கருதிக் கருத்து வேறுபாடுகளைப் பகுத்துக் கொள்ளுகின்ற பாதர்களை தெய்வம் எங்கும் உண்டு " எனச் சாடுகின்றார். தனை தனது ஞானவெட்டியான் 1500 என்னும் நூலில் :

" உங்கள் தெய்வ உண்டெனவும் வேறு செய்து
அங்கங்கள் வேறுளதா யாகமங்களுற் பவித்தார்
பங்கமதாய் வேறு செய்யும் பாதகரே அங்குமிங்கும்
எங்கெங்குமாய் நிறைந்த ஈசனென்றறிகிலீரே "


- ஞானவெட்டியான் பாடல் 616

" ஒன்றாய் உயிராய் உடல்தோறும் நீ இருந்தும்
என்றும் அறியார்கள் ஏழைகள்தாம் பூரணமே "

- பட்டினத்தார் பாடல் :30

" ஒருவனென்றே தெய்வத்துவத்தை வணங்கவேணும்
உத்தமனாய்ப் பூமிதனிலிருக்கவேணும்

- பட்டினத்தார் பாடல் 68

கட்டோடே கனத்தோடே வாழ்ந்து , பட்டோடே பணியோடே திரிந்து , கொட்டோடே முழக்கோடேகோலங்கண்டு, பண்ணாத தீமைகள் பண்ணி, பகராத வன்மொழிகள் பகர்ந்து , நண்ணாத தீயினம் நண்ணி, நடவாத நடத்தை நடந்து ,உள்ளொன்று வைத்து புறமொன்றுப் பேசித் திரிவார்;
ஆலயம் சென்று புற அபிசேகம் செய்தல், பாவம் போக்கும் என்று வந்தனர்- வருகின்றனர்.இத்தகையோரைப் பார்த்துப் பாடுவதே இவ்வறிவுரைப் பாடல்கள்

பார்க்கின்ற மலரோடு நீயே இருத்தி, அப்பனி மலர் எடுக்க
மனமும் நண்ணேன் எனத் தாயுமானார் பாடுவதுவதும்
"வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்"
என இராமலிங்க சுவாமிகள் பாடியது போலவும், மனம் செம்மைப் படுவதே உயரிய வழிபாடாகும்.

" மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டாம் " எனத் திருமூலர் கூறுவதைக் காணலாம்.

எந்த நாட்டிலும், எந்தக் காலத்திலும் , பொதுவாகச் சீர்திருத்தம் பேசியவர்கள் ஏதாகிலும் ஒரு வகையில் அரசியலோடு தொடர்பு கொண்டவர்களாவே விளங்குகின்றனர். ஆனால், சித்தர்கள் அவ்விதிக்கு விலக்காவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

மனிதரில் சிலருக்கு இருக்கும் பலவீனமான நம்பிக்கையைப் பயன்படுத்திச் சிலர்சமய துறையில் இருந்துகொண்டு பயன்படுத்திக் கொண்டு வயிற்றையும், பொருளையும் பெருக்கி வருகிறார்கள். அத்தகையயோர் எக்காலத்தும் இருப்பார்கள் போலும். இவர்களைச் சாடிப் பாடும் பாடல்கள் சில,

போலிகளைச் சாடி சித்தர்கள் பாடிய சில பாடல்கள் :-

பாரப்பா சீடர்களை அழைப்பான் பாவி
பணம்பறிக்க உத்தேசம் பகர்வோ என்பாரப்பா
பிரமநிலை காட்டா மற்றான்
காசப் பொய்களையும் அன்றோ சொல்வான்
நேர்ப்பா சீடனுக்குப் பாவமாச்சு
நிட்டை சொல்லுங் குருக்களுக்குத் தோடமாச்சு
வீரப்பா அடக்குகின்ற இடத்தைப் பாரான்
விதிபோல முடிந்ததென்று விளம்புவானே..

சித்தர் ஞானக்கோவை : காகசுண்டர் பாடல் :35.

இத்தகைய போலித் துறவிகளின் மாய வித்தைக்கண்டு மனதைப் பறிகொடுக்க வேண்டாம் என்பதே சித்தர்களது அறிவுறுத்தல். இத்தகைய வேடதாரிகளை இனங்கண்டு கொள்ளவேண்டும் என்பதற்காக மெய்ஞ்ஞானிகளின் இலக்கணத்தைக் கூறுகிறார் பட்டினத்தார்.

பேய்போல திரிந்து பிணம்போல் கிடந்து இட்ட பிச்சையெல்லாம் நாய்போல் அருந்தி நரிபோல் உழன்று நன் மங்கைரைத் தாய்போல் கருதித் தமர்போல் அனைவர்க்கும் தாழ்மை சொல்லி சேய்போல் இருப்பர் கண்டீர் உண்மை ஞானம் தெளிந்தவரே

பத்திரகிரியாரும், சிவவாக்கியரும் ஏற்க்குறைய ஒத்த கருத்துக்களை கூறிகிறார்கள். எத்துணை உயர்ந்த நிலை இது.! அனைத்தும் அடங்கிய நிலை அன்றோ இது ! இத்தகையாரே தூய துறவிகள் அவர்கள் சமுதாயம் உய்யும் , போலித் துறவிகளைப் பின்பற்றுவதால் அழிவு நேரும் என்கிறார் திருமூலர்:

குடுடும் குருடும் குருட்டுட்டம்டி
குருடும் குருடும் குழிவிழு மாறே -

-திருமந்திரம் 1652.

என்பது பாடல். " வேடதாரிகளை விட்டுவிடுங்கள் அவர்கள் குருட்டு வழியினர். குருடனுக்கு குருடன் வழி காட்டினால் இருவரும் வீழ்ந்து அழிவர்." என்றும் கருத்து வேதமும் கூறுவது இங்கு நோக்கத்தக்கது.

உண்மையை அறியாது அப்படியே கண்ணை மூடிக்கொண்டு மக்கள் உள்ளார்கள். ஆதியிலே அதனை மறைத்தவன் ஓர் வல்லவன். அவன் மறைத்ததை இன்னும் பலர் விடை காணவில்லை.

நாமும் உண்மையை உணராது - உணர முயலாது சாதிலும், மதங்களிலும் சமய நெறிகளிலும்,சாத்திர சந்தடிகளிலும், கோத்திரச் சண்டையிலும் அலைந்தலைந்து வீண் போகின்றோம்.

தமிழ் புலவர்களும், அறிஞர்களும் தம் இலக்கியங்களில் வாய்ப்பு நேரும் போதெல்லாம் தமிழை போற்றினர், வளர்த்தனர், மேன்மையுற செய்தனர்.சித்தர்கள் தாமரை இலை நீராக சமுதாயத்தில் இருந்தாலும், பற்றற்றவர்களாக இருந்தாலும் மொழி உணர்வு நீங்காமல் வாழ்ந்தனர் என்பதை அவர் தம் பாடல் வழி, நூல்கள் வாயிலாக அறியமுடிகிறது.

" முத்தி தருபவன் அவனே ; முத்தியாய் விளங்குபவனும் அவனே ;ஞானம் தருபவன்அவனே ; ஞானமாய் விளங்குபவனும் அவனே ; பாலில் கலந்துள்ள நெய்போல் காணும் பொருளிலெல்லாம் கரந்துள்ளான்"
எனத் திருமூலர் இறைவனைப் போற்றும் போது " முத்தமிழாகவும் விளங்குகிறான் " எனக் குறிக்கின்றார். எல்லாமாய் விளங்கும் இறைவன் தமிழாகவும் விளங்குகின்றான். எல்லாவற்றிலும் சுரந்துள்ளவன்,
தமிழுள்ளும் கரந்துள்ளான். முக்தியும், ஞானமும் விழுமியன. அவற்றோடு தமிழையும் வைத்துப் போற்றுகின்றார்.

"முத்தியை ஞானத்தை முத்தமிழ ஓசையை
எத்தனை காலமும் ஏத்துவர் ஈசனை
நெய்தலைப் பால்போல் நிமலனும் அங்குளன்
அத்தகு சோதியது விரும்பாரன்றே "- திருமந்திரம்.

வேறு ஒரு பாடலில் திருமந்திரப் பாடலில் சாத்திரத்தை தமிழில் படைக்கும்அருளைக் கூட்டிப் பாடச் செய்த பெருங் கருணையைப் பாடி பரவுகிறார். :

" என்னை நன்றாக இறைவன் படைத்தனன்
தன்னை நன்றாகத் தமிழ் செய்யு மாறே..."

இவ்வரிகளில் தமிழில் பாடும் அருள் கிட்டியதன் பெருமை தொக்கி நிற்பதைக் காணலாம்.

" அருமலர் மொழியுஞான அமுர்த செந்தமிழைச் சொல்வாம் "


=ஞானவெட்டியான்

"பண்டுடன் பழகி பைந் தமிழுணர்ந்து தெண்ரை மீதிற் றெளிந்தவர் சித்தரே "

" சிந்தையுறு ஞானந் தெளியவுரை பாடுதற்கு
வந்தபஞ்ச பூதத்தின் வாழ்க்கையே- செந்தமிழ் நூல்
காவியந்தானாயிரத்தில் கல்லா யொரு நூலும்
தேவியென்னும் பூரணியே சீர்


-அகஸ்தியர் ஞானம் 100

பொதிகை மேவு மகத்தீர ராலெனது
போதித்த தமிழ் வாக்கியம்

- ஞான வெட்டியான் 1500

கருத்து விளக்கத்திற்காகப் பயன் படுத்தப்படும் உவமை இலக்கிய சுவைக்கு மெருகூட்டுவதும். சித்தர் பாடல்களில் கணக்கற்ற உவமைகள் காணப்படுகின்றன.

விழுமிய கருத்துக்களை கூறுவனவாக இருப்பினும் சித்தர் இலக்கியங்களில் மற்ற இலக்கியங்களைப் போலவே சொல், பொருள், நயம் மிகுதியாக காணலாம்.முதற் சங்கம், இடைச் சங்கம், கடைச் சங்கம் . இச் சொல்லாட்சி வைத்துப் பட்டினத்தார் சுவையான பாடல் ஒன்றினைக் காண்போம்.

" முதற்சங்கம் அமுதூட்டும் மொகுழலார் இசை
நடுச்சங்கம் நல்விலங்கு பூட்டும் - கடைச் சங்கம்
இம்போதது ஊதும் அம்மட்டோ நாம் பூமி வாழ்ந்த நலம்.

மனித வாழ்வில் மூன்று நிலை முக்கியமானது. குழவி பருவம்,வாலிப பருவம், முதுமைப் பருவம் என்பன. இம் மூன்று பருவங்களும் வாழ்க்கை¨யின் திருப்பு முனைகளாகும்.குழவி பருவம் வாலிபப் பருவத்திற்கும், வாலிபப் பருவம் முதுமைப் பருவத்திற்கும் முதுமைப் பருவம் மரணத்திற்கும் திருப்புமையாகும்.இம்மூன்று, நிலைகளிலும் சங்கம் [சங்கு] பெறுகிறது. குழவி பருவம் சங்கம் - அமுதூட்டும் வாலிபப் பருவத்தில் சங்கம் மணவிழாச் சின்னம் ; முதுமையின் சங்கம் மரணத்திற்கு சின்னம். எனவே இம்மூச்சங்கமும் முறையே தோற்ற வளர்ச்சி மறைவைக் குறிக்கிறது.

சித்தர்கள் பல்வேறு துறைகளைச் சார்ந்த இலக்கியங்களை, நூல்களை படைத்துள்ளனர். மொழி நூல், யோகநூல் ; மந்திரம் ; தந்திரம் ; யந்திரம் ;மருத்துவ நூல் ; புவியியல் நூல் ; தாவரயியல் நூல் ; சோதிட நூல் ;கணித நூல் ; வானநூல் என தமிழுக்கு சிறப்பு சேர்த்துள்ளனர்.

ஆனால் அவைகள் யாவும் இன்னும் 'பாழாய் பழங் கனவாய் ' தான் உள்ளது.சில அனுவபங்களை படித்தால் புரியும் , சில கேட்டால் , சில நுகர்ந்தால், சிலவே உணர்ந்தால் புரியும். அத்தனை விதங்களிலும் , நிறைவாய் , சுகானுபவமாய் நமக்கு சாந்தமும் -இன்பமும் அளிப்பது இலக்கியம்.

மனம் பழுத்தால் பிறவி தங்கம் -
மனம் பழுக்காவிட்டால் பிறவி பங்கம் -
தங்கத்தை எண்ணி பங்கம் போதாதே - தங்க இடம் பாரப்பா....

இதுவே சித்தர்களின் கொள்கை.
நலம் சிறக்க , நல்லன விளைக

No comments:

Post a Comment