Total Pageviews

Sunday 19 February 2012

ஷாருக் கான் - கமலஹாசன்


நான் யார் எனத் தெரிந்தே தனியறையில் வைத்து அவமானப்படுத்தினர்-ஷாருக்

நியூயார்க் நெவார்க் விமான நிலையத்தில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக தன்னை அமெரிக்க குடியேற்றத் துறை அதிகாரிகள் அடைத்து வைத்தது தற்செயலானது அல்ல என்றும், தான் யார் எனத் தெரிந்த பிறகும் அந்த செயலை அவர்கள் தொடர்ந்தனர் என்றும் நடிகர் ஷாருக் கான் கூறியுள்ளார். 

இந்த இரண்டு மணிநேரத்தில் தன்னை போன் செய்யக்கூட அனுமதிக்கவில்லை என்றும், பின்னர் அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகத்துக்கு மட்டும் பேச அனுமதித்ததாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். 

பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக் கான், அமெரிக்கா சென்றுள்ளார். சிகாகோவில் நடக்கும் இந்திய சுதந்திர தின விழாவில் பங்கேற்பதற்காக, அவர் நேற்று அதிகாலை நியூஜெர்சி மாகாணத்தில் உள்ள நெவார்க் விமான நிலையம் வந்தார்.

ஷாருக் பெயரில் 'கான்' என்ற வார்த்தை இருப்பதால், அவரை அமெரிக்க குடியேற்றத் துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். சந்தேகத்தின்பேரில் நிறுத்தப்பட்ட அவரிடம், அமெரிக்காவுக்கு வந்த காரணம் என்ன என்பது உட்பட பல கேள்விகளை எழுப்பி இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தினர்.

இதுகுறித்து ஷாருக் கான் கூறுகையி்ல்,

நான் ஒரு பிரபலமான இந்திய நடிகர், என்னைப் பற்றி இந்தியத் தூதரத்திடம் விசாரணை செய்யுங்கள் என்று திரும்பத் திரும்பக் கூறினேன். ஆனால், அதை அவர்கள் காதிலேயே வாங்கவில்லை.

பின்னர் இந்திய தூதரகத்துக்கு நானே ஒரே ஒரு போன் கால் செய்ய மட்டுமாவது அனுமதி கோரினேன். அதையும் அனுமதிக்கவில்லை.

இந் நிலையில் தான் காங்கிரஸ் எம்.பி. ராஜீவ் சுக்லா இதுபற்றி அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகத்திற்கு தகவல் தந்தார். அவர்கள் அமெரிக்க குடியேற்றத்துறையை தொடர்பு கொண்ட பின்னர் தான் என்னை இந்திய தூதரகத்துடனும் என் குடும்பத்தினருடனும் பேச அனுமதித்தனர்.

நெவார்க் விமான நிலையத்தில் நடந்த சம்பவம், சுய மரியாதையை விரும்பும் என்னைப் போன்றவர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திவிட்டது. 

என்னுடைய பெயர் முஸ்லிம் பெயர் என்பதால், அவர்களின் விசாரணைப் பட்டியலில் இடம் பெற்றுவிட்டேன். என்னிடம் விசாரணை நடத்திய அமெரிக்க குடியேற்றத் துறை அதிகாரிகள் சிலர், என்னை நன்கு அறிவர் என்றாலும், எனது வேண்டுகோளை ஏற்க மறுத்து விட்டனர். விதிப்படித்தான் தாங்கள் நடக்க முடியும் என்றும் கூறி விட்டனர். 

கிட்டத்தட்ட 50 முறை அமெரிக்காவுக்குப் போய் வந்துவிட்டாலும் பொதுவாக அமெரிக்கப் பயணம் என்றாலே நான் எப்போதும் கவலைப்படுவேன். இதுபோன்ற சம்பவங்கள் நடந்து விடுமோ என்று அஞ்சுவேன். அதற்கேற்ப மிகுந்த கசப்பான அனுபவம் நேர்ந்துவிட்டது.

இதனால் மிகுந்த கோபம் அடைந்தேன். நல்ல வேளை இந்த அவமானத்தை என் குடும்பத்தினர் சந்திக்கவில்லை என்பதை நினைத்து சந்தோஷம் அடைந்தேன்.

சில முஸ்லீம்கள் செய்யும் தீவிரவாத செயல்களால் கோடிக்கணக்கான முஸ்லீம்களுக்கு எவ்வளவு தொல்லை ஏற்படுகிறது. அதை நினைத்தாலே மனம் கனக்கிறது என்றார்.

இதற்கிடையே ஷாருக் கானுக்கு ஏற்பட்ட அவமானம் குறித்து இந்தியாவில் உள்ள அமெரிக்கத் தூதரகத்திடம் மத்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.

இதையடுத்து அமெரிக்கா வில் குடியேற்றப் பிரிவு வெளியிட்டுள்ள விளக்கத்தில், முஸ்லீம் என்பதால் ஷாருக்கை அவ்வாறு நடத்தவில்லை. அவரது பெட்டிகள் உரிய நேரத்தில் வராததால் தான் குழப்பம் ஏற்பட்டது.

அவரது ஆவணங்கள் சரியாக இருக்கிறதா என்பதை பார்த்துவிட்டு அனுப்பிவிட்டோம். அதற்கு 2 மணி நேரம் பிடித்தது என்று கூறப்பட்டுள்ளது.

நமது உலக நாயகன் கமலஹாசன் இதே போன்ற சோதனையை எதிர் கொண்டது குறிப்பிடத்தக்கது.

அமெரி்க்கர்களையும் அப்படியே நடத்த வேண்டும்...

இது குறித்து மத்திய அமைச்சர் அம்பிகா சோனி கூறுகையில், முஸ்லீம் என்பதற்காகவோ அல்லது ஆசியர் என்பதற்காகவோ ஷாருக்கை இவ்வாறு நடத்தியிருந்தால் அது கடும் கண்டனத்துக்குரியது.

இனி இந்தியா வரும் அமெரிக்கர்களையும் விமான நிலையத்தில் வைத்து பரிசோதனை நடத்தி, கேள்வியாய் கேட்டு துளைத்தெடுத்தால் அவர்களுக்கு அடுத்தவரின் வேதனை புரியும் என்றார். 

No comments:

Post a Comment