Total Pageviews

Saturday 25 February 2012

ஜாதி இரண்டொழிய


ஜாதி இரண்டொழிய வேறில்லை....

உங்கள் வாழ்க்கையில் நடைபெற்றுள்ள மிக முக்கிய நிகழ்வுகளைப் பட்டியலிட்டு, அதற்கு உதவியோரை வரிசைப்படுத்துங்கள். பின்னர் அவர் எந்த ஜாதியைச் சேர்ந்தவர்கள் என்பதைக் குறிப்பிடுங்கள். அதில் உங்களுக்கு உதவியோர் பெரும்பாலானோர் வேறு ஜாதிகளைச் சேர்ந்தவர்களாகவே இருப்பர். சொந்தக்காரர்கள் பெரும்பாலும் அதிகம் உதவியதில்லை. எனவே ஜாதிகளை மறந்துவிட்டு மனித நேயத்தை வளர்க்கப் பாடுபடுங்கள்''என்று சமூக ஆர்வலர் ஒருவர் பேசினார்.

 1906-ல் ஆங்கிலேயரின் ஏகபோக வணிக முறையைக் கண்டித்து சுதேசி கப்பல் கம்பெனி மூலம் தூத்துக்குடி-கொழும்பு இடையே கப்பலோட்டினார் வ.உ.சி. இதனால் கோபமடைந்த பிரிட்டிஷ் அரசு, பயணக் கட்டணத்தை ஒரு ரூபாயாகக் குறைத்தது. இதையடுத்து சுதேசி கப்பல் நிறுவனமும் தனது கட்டணத்தை 50 பைசாவாக்கியது. பிரிட்டிஷ் கப்பல் நிறுவனம் பயணத்தையே இலவசமாக அறிவித்தது. விளைவு, சுதேசி கப்பல்கள் காலியாகச் சென்றன. பெருத்த நஷ்டத்துக்கு இடையே 1909-ல் சுதேசி கப்பல் கம்பெனி திவாலாகியது.

கோயம்பத்தூர் சிறைச்சாலையில் செக்கிழுத்த வ.உ.சி. நான்கரை ஆண்டுகளுக்குப் பிறகு வெளியே வந்தபோது, அவரை வரவேற்க வந்தவர்கள் சுப்பிரமணிய சிவா உள்ளிட்ட இருவர் மட்டுமே.

1800-களின் தொடக்கத்தில் கொங்கு நாட்டின் பாளையக்காரர் தீரன் சின்னமலை ஆங்கிலேயர்களை எதிர்த்தார். ஏராளமான இளைஞர்களை ஒன்றுதிரட்டி பிரெஞ்ச் நாட்டின் ராணுவப் பயிற்சி பெற வைத்தார். இதே காலகட்டத்தில் திப்பு சுல்தான் தனது மைசூர் படை மூலம் ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போரிட்டபோது அவருக்குத் தனது படையுடன் பகிரங்கமாக உதவியவர் சின்னமலை.
 திப்புசுல்தானை தோற்கடித்த ஆங்கிலேயர், தீரன் சின்னமலையையும் பழிதீர்த்தனர். முதல் இந்திய சுதந்திரப் போர் தொடங்குவதற்கு 50 ஆண்டுகளுக்கு முன்பே வீரபாண்டிய கட்டபொம்மன், மருது பாண்டியர் உள்ளிட்டோர் ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போராடினர். 1789-ல் 12 ஆயிரம் வீரர்களைத் திரட்டி ஆங்கிலேயரின் கூட்டாளியாகச் செயல்பட்ட ஆற்காடு நவாபை மருது பாண்டியர்கள் விரட்டியடித்தனர். கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட பிறகு தப்பி வந்த ஊமைத்துரைக்கு அடைக்கலம் வழங்கினர். இதையடுத்து ஆங்கிலேயர்கள் மருது பாண்டியர்களை வீழ்த்தினர். மருது சகோதரர்கள் தூக்கிலிடுவதற்கு முன்பு கூறிய வரிகள் "நண்பர்களுக்காகப் போராடினோம்.... நாட்டுக்காக உயிர் துறக்கிறோம்'.
 எட்டையபுரத்தில் சுப்பிரமணியனாகப் பிறந்து குறுகிய காலத்திலேயே மகாகவியாகிப் போற்றப்பட்டவர் பாரதி. தனது பாடல்கள் மூலம் தேசப்பற்றை ஊட்டி வளர்த்த பாரதி வறுமையில் வாடினார். 39 வயதில் பாரதி மறைந்தபோது இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றவர்கள் வெறும் பதினான்கு பேர் மட்டுமே.

 மேற்குறிப்பிட்டுள்ள தலைவர்கள் வாழ்ந்தபோது தங்கள் ஜாதியினரை முன்னிறுத்தியது இல்லை. தேசம், நாட்டுப்பற்று, தியாகம்தான் அவர்களின் இதயத்தில் கோலோச்சிக் கொண்டிருந்தன. நாட்டின் சொத்தாக விளங்கக்கூடிய தியாக சீலர்களை எல்லாம் ஜாதிக் கண்ணோட்டத்தில் கொண்டு வருவது அவர்கள் வாழ்ந்த வாழ்க்கை, செய்த தியாகங்களை எல்லாம் கொச்சைப்படுத்துவதாகவே இருக்கிறது.

 தியாகத் தலைவர்கள் அண்ணா போன்றவர்களெல்லாம் கோலோச்சிய தமிழகம், இன்று ஜாதியக் கட்சிகளின் பின்னால் செல்லும் நிலைமை. ஒரே ஜாதிக்கு பல கட்சிகள். அந்தப் பல கட்சிகளும் எதிர் எதிர் அணியில் கரம்கோத்து தேர்தலைச் சந்திக்கின்றன.பிறகு பிரிகின்றன. தேர்தல் தோல்வி பயத்தால் தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய கட்சிகள் அவர்களைச் சேர்த்துக்கொள்ளப் போட்டி போடுகின்றன.

 இப்போதைய நிலவரப்படி விடுதலைச் சிறுத்தைகள்-புதிய தமிழகம், மூவேந்தர் முன்னேற்றக் கழகம், மூவேந்தர் முன்னணிக் கழகம், கொங்கு முன்னேற்றப் பேரவை-கொங்கு இளைஞர் பேரவை, பா.ம.க.-வன்னியர் கூட்டமைப்பு, மனித நேய மக்கள் கட்சி-முஸ்லிம் லீக், சமத்துவ மக்கள் கட்சி-பெருந்தலைவர் மக்கள் கட்சி என ஒரு குறிப்பிட்ட சமுதாயத்துக்காகப் போராடுவதாகக் கூறும் இவர்கள், வரும் தேர்தலில் முண்டாசு கட்டத் தயாராகிவிட்டனர். புதிய நீதிக் கட்சி, புரட்சி பாரதம் போன்ற கட்சிகளுக்கு இதுவரை இதயத்தில் மட்டுமே இடம் கிடைத்துள்ளது.

 ஜாதி அமைப்புகள் இருக்கக் கூடாது என்பது நம் வாதம் அல்ல. பதவியை அடைய குறுக்கு வழியாக ஜாதிகள் பயன்படுத்தப்படுகின்றன. அதற்கு ஏற்கெனவே உள்ள பெரிய அரசியல் கட்சிகளும் துணை போகின்றனவே என்பதுதான் எதார்த்தவாதிகளின் கவலையாக உள்ளது.
 ஓரிரு தொகுதியில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.-வாகி, ஒட்டுமொத்த ஜாதிக்காரர்களை முன்னேற்ற முடியும் எனில் அந்த ஜாதியைச் சேர்ந்த, அரசியல் கட்சிகள் மூலம் பதவியில் இருந்த நூற்றுக்கணக்கான எம்.எல்.ஏ.க்கள் செய்யாதது ஏன்? சமுதாய வளர்ச்சிக்கு அரசியல் பதவி மட்டுமே பயனளிக்காது.

 மேலே குறிப்பிட்ட தலைவர்அண்ணாவை ஒரு நிமிடம் சிந்தித்துப் பாருங்கள். எதிர்காலத்தில் தங்களை முதலியார், ஐயர், தேவர், கவுண்டர், நாடார், வன்னியர், நாயுடு என கொச்சைப்படுத்துவார்கள் என தங்கள் கனவில்கூட நினைத்திருக்க மாட்டார்கள். அந்த மாமனிதர்கள் தமிழகத்துக்குச் சொந்தமானவர்கள். அவர்களை ஜாதிய முன்னோடிகளாக்கிக் கொச்சைப்படுத்த வேண்டாம் என்பதே பெரும்பாலோரின் வேண்டுகோள். ஜாதி இரண்டொழிய வேறில்லை. ஏழைகள்- பணக்காரர்கள் என்பதுதான் அது.

முகவை.க. சிவகுமார்
நன்றி - தினமணி

No comments:

Post a Comment