Total Pageviews

Sunday 19 February 2012

மாதராய் பிறப்பதற்கு...



மாதராய் பிறப்பதற்கு மாதவம் செய்திட வேண்டுமாம்...

கிட்டத்தட்ட 50 கோடி பெண்கள் வாழும் நாடு இது. கல்வியிலும், திறமையிலும் ஆணுக்கு இங்கே சளைத்தவரில்லை பெண்கள். 2003 கணக்குப்படி அந்த 50 கோடி பெண்களில் பாதிப்பேர் படித்தவர்கள். 48.3% பெண்கள் கல்வியறிவு பெற்றவர்கள் என்பதும், அதில் 28% பேர் வேலையில் இருப்பவர்கள் என்பதும் பெண்ணின் பெருமைக்கு சான்று.

ஒட்டுமொத்தமாக மட்டுமல்ல, ஆறு கோடியை தாண்டிய தமிழகத்தின் ஜனத்தொகையிலும் பெண்களுக்கு பாதியிடம். அதிலே படித்தவர்கள் மட்டும் ஒரு கோடியே 77 லட்சம் பேர் என்பதும் பெண்களின் வளர்ச்சிக்கு ஆதாரம். இப்படி வளர்ச்சிப் பட்டியலில் போதிய இடம் பிடித்துவிட்ட பெண்களுக்கு இன்னுமா பிரச்னை?

இந்த கேள்விக்கு இந்த புள்ளிவிவரங்களே பொருத்தமான பதில்.

*    ஒவ்வொரு 3 நிமிடங்களில் பெண்ணுக்கு எதிரான ஒரு குற்றம் பதிவாகிறது.

*    ஒவ்வொரு 9 நிமிடங்களில் ஒரு பெண், கணவனாலோ அல்லது அவனது உறவினராலோ கொடுமைப்படுத்தப்படுகிறாள்.

*    ஒவ்வொரு 15 நிமிட இடைவெளியில் ஒரு பெண் பாலியல் தொந்தரவுக்கு ஆளாகிறாள்.

*    ஒவ்வொரு 53 நிமிடங்களில் பெண்ணுக்கு எதிரான ஒரு பாலியல் கொடுமை அரங்கேறுகிறது.

*    ஒவ்வொரு 29 நிமிடங்களில் ஒரு கற்பழிப்பு சம்பவம் நடக்கிறது.

*    ஒவ்வொரு 77 நிமிடங்களில் ஒரு வரதட்சணை மரணம் நிகழ்கிறது.

எனவே ஒரு பக்கம் வளர்ச்சி; மறுபக்கம் அதிர்ச்சி என்ற நிலையிலேதான் இன்றைய இந்தியப் பெண்களின் வாழ்க்கைப் பயணமும் தொடர்கிறது. கருவிலே தொடங்கிய கொடுமை, கல்யாணம் ஆன பின்னும் விடாமல் விரட்டுவதால் தான் பெண்களை பாதுகாக்க குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம், 2005ல் கொண்டு வர வேண்டிய கட்டாயம் வந்தது. இந்த சட்டம் வந்த பிறகும் குற்றம் குறையவில்லை. 2006 நவம்பர் முதல் 2007 ஜூலை வரையிலான காலகட்டத்தில் மட்டும் 7,913 வழக்குகள் பதிவாகியுள்ளன. தமிழகத்தில் 2006 அக்டோபரில் தான் இந்த சட்டத்தின் கீழ் முதல் வழக்கே வருகிறது. 2008 மே நிலவரப்படி 712 புகார்கள். அதில் தீர்வு காணப்பட்டவை 179 என்கிறது தமிழக புள்ளிவிவரம்.

கருவிலே ஆணா, பெண்ணா என அறியும் முறை, குழந்தை திருமணம், கட்டாயக் கல்யாணம், கவுரவக் கொலை, வரதட்ணை பலி, குடும்ப வன்முறை மற்றும் பாலியல் பலாத்காரம்... பெண்களுக்கு எதிரான குற்றங்களை இப்படி வகைப்படுத்துகிறது பிரக்ஞா என்ற ஒரு அமைப்பு.
பெண் சிசுக் கொலை, கருவிலே கண்டுபிடித்து அழிப்பு என பெண் குழந்தைகள் ஒழிப்பிற்கு பல வழிமுறைகள். கள்ளிப்பால் கொலைகளை ஒழித்தால், அடுத்ததாக கருவில் இனம் கண்டுபிடிக்கும் கருவிகள் வந்தன. விஞ்ஞான வளர்ச்சியின் கண்டுபிடிப்பு கூட பெண்ணை கொல்லும் கருவிகளாகத்தான் உருமாறின. இந்த வகையில் மட்டும் இந்தியாவில் ஒரு கோடி பெண்களின் பிறப்பு தடுக்கப்பட்டுள்ளது என்ற தகவல் அதிர்ச்சி தராமல் இருக்குமா?

விடியல் பிறக்குமா?

பெண்கள் அமைப்பான பிரக்ஞா நிர்வாக அறங்காவலர் சுவர்ணா ராஜகோபாலன் கூறுவதென்ன?

பெண்கள் விஷயத்திலான பாகுபாடு குழந்தைப் பருவத்தில் தொடங்கி விடுகிறது. பள்ளி, உணவு, உடை, மருத்துவம் போன்ற விஷயங்களில் ஆண் குழந்தைகளுக்கு தரும் முக்கியத்துவம் பெண் குழந்தைக்கு இல்லை. வளர்ந்து விட்ட பிறகும், அவளது விருப்பத்திற்கு மதிப்பில்லை. அவளது உணர்வு, உள்ளம் எதைப்பற்றியும் கவலைப்படாமல் திருமணம் பேசப்படுகிறது. புகுந்த வீட்டில் பிரச்னை என்கிறபோது, ‘அட்ஜஸ்ட் பண்ணிப் போ’ என்ற அறிவுரை மட்டுமே தாய் வீட்டில் இருந்து கிடைக்கிறது. ‘கணவன் சாப்பாடு போடலியா? அட்ஜஸ்ட் பண்ணு, அடிக்கிறானா? அட்ஜஸ்ட் பண்ணு’... இப்படியே அமுக்கப்படுவதால், ‘எல்லாம் என் தலையெழுத்து’ என்று முடங்கிக் கொள்ளும் முடிவுக்கு வந்து விடுகின்றனர். இதெல்லாம் தலைவிதி அல்ல; அவளை பாதிக்கிற வன்முறை என்பதை என்றைக்கு உணரத் தொடங்குகிறாளோ அன்றைக்கு பெண்ணினத்திற்கு முழு விடியல் பிறக்கும் என்கிறார்.

47% பெண்களுக்கு கட்டாய கல்யாணம்

18 வயதுக்கு முன்பு பெண்களுக்குத் திருமணம் செய்வதை குழந்தைத் திருமணம் என்கிறது யுனிசெஃப் அமைப்பு. இந்தியாவில் பெண்களின் திருமண வயது 18, ஆண்களுக்கு 21. இதை மீறி சட்டப்படி சிறுவர்களாக உள்ளவர்களுக்கு, விருப்பத்துக்கு மாறாக கட்டாயத் திருமணம் செய்து வைக்கப்படுகிறது. குடும்ப கவுரவத்துக்காகவும், குடும்பங்களின் ஒற்றுமைக்காகவும், வியாபார லாபங்களுக்காகவும் கட்டாயத் திருமணங்கள் நடக்கின்றன.

உலக அளவில் தெற்காசியப் பகுதியில்தான் அதிக அளவில் கட்டாயத் திருமணங்கள் நடக்கின்றன. கடந்த ஆண்டில் யுனிசெஃப் கணக்கெடுப்பின்படி, இந்தப் பகுதியில் 20&24 வயதுள்ள பெண்களில் 49 சதவீதம் பேருக்கு அவர்களின் 18 வயதுக்கு முன்பே திருமணம் நடந்துள்ளது. இந்தியாவில் இது 47 சதவீதம், அதுவும் கிராமப் பகுதிகளில் 56 சதவீதம்.

உலக அளவிலான கட்டாயத் திருமணங்களில், 40 சதவீதம் இந்தியாவில்தான் நடக்கின்றன. அதில் 10 சதவீத மணமகன்களுக்கு வயது ரொம்ப கம்மி.
இந்திய அளவில் 2005ல் 122 கட்டாயத் திருமணங்கள். 2006ல் 99, 2007ல் 96 பதிவாகி
யுள்ளன.

வரதட்சணை பலி உ.பி.யில் அதிகம்

புதிதாக திருமணமான பெண்களின் மரணங்களுக்கு, பெரும்பாலும் வரதட்சணை தான் காரணம். 97ம் ஆண்டில் 6,006 ஆக இருந்த வரதட்சணை சாவுகளின் எண்ணிக்கை, 2007ல் 8,093 ஆனது. கணவன் மற்றும் அவரது குடும்பத்தினரின் கொடுமை குறித்த வழக்குகள் 97ம் ஆண்டில் 36,592. இது 2007ல் 75,930 ஆக அதிகரித்தது.

நாட்டிலேயே அதிக அளவாக, உத்தரப்பிரதேசத்தில் 25.7 சதவீதம் வரதட்சணை மரணங்கள் நடப்பதாகவும், அதையடுத்து பீகாரில் 14.5 சதவீதம் நிகழ்வதாகவும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

கலப்புத் திருமணம் - கவுரவக் கொலை

தனிப்பட்ட விருப்பத்தின்படி நண்பரையோ காதலரையோ கணவரையோ ஒரு பெண் தேடிக்கொள்ளும்போதும், குடும்பத்தினர் திணிக்கும் மாப்பிள்ளையை ஏற்க மறுக்கும்போதும், பெண்கள் மீது குடும்பத்தினர் தாக்குதலை நடத்துகிறார்கள். அது மரணத்தில் முடியும் எனத் தெரிந்தே நடத்தப்படுகிறது. வெறும் வறட்டு கவுரவத்துக்காக நிகழும் மரணங்கள்.

குடும்ப கவுரவத்தை மீறி, சாதி கடந்து திருமணம் செய்துகொள்ளும் பெண்கள்  இந்த கவுரவக் கொலை’க்கு இலக்கு ஆகியுள்ளனர். அகில இந்திய ஜனநாயக பெண்கள் சங்கம் நடத்திய ஒரு ஆய்வில், அரியானா மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் மட்டும் நாட்டின் 10 சதவீத Ôகவுரவ கொலைகள் நிகழ்கின்றன என கண்டறியப்பட்டுள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில், தமிழகத்தின் தெற்கு மாவட்டங்களில் 60 சம்பவங்கள் நடந்துள்ளன.

பாலியல் பலாத்காரம் 733% அதிகரிப்பு

பாலியல் பலாத்காரம் அதிகரித்து வரும் குற்றம். பதிவான விவரங்களின்படி 1971ம் ஆண்டிலிருந்து 733 சதவீதம் அதிகரித்துள்ளது. 1997ல் 15,330 வழக்குகள். 2007ல் 20737 ஆக அதிகரித்தது. இதில் மத்திய பிரதேசத்திற்கு முதலிடம்.
இந்தியாவில் பாலியல் பலாத்காரக் குற்றவாளிகளில் 92.5 சதவீதம் பேர், பாதிக்கப்பட்ட பெண்களுக்குத் தெரிந்த நபர்களாகவே இருக்கின்றனர். கொடுமைக்கு உள்ளாக்கப்படுவோரில் 9.5 சதவீதம் 15 வயதுக்கும் குறைவான சிறுமிகள். பாதிக்கப்பட்ட மற்றவர்களில் 15&18 வயதினர் 15.2 சதவீதம் பேர். இரண்டில் மூன்று பங்கினர் 18க்கும் 30க்கும் இடைப்பட்ட வயதினர் என்கிறது தேசிய குற்ற ஆவணக் காப்பகம்.

இவர்கள் என்ன சொல்கிறார்கள்?

லத்திகா சரண் (முன்னாள் தமிழக காவல்துறை தலைவர்)
இன்னும் முன்னேற வேண்டும். எந்த சூழ்நிலையிலும் பிறரைச் சாராமல் சுயமாக முடிவு எடுக்கும் நிலை வரவேண்டும். அதற்கு குடும்பம், சமூகம் எல்லா இடங்களிலும் விழிப்புணர்வு அவசியம்.

ஏ.பூங்குழலி (சுய உதவிக்குழு)
சுயஉதவிக் குழுக்கள் பெண்களை அடுத்தக் கட்டத்திற்கு அழைத்து வந்துள்ளது. பெண்கள் தைரியமாக வெளியில் வந்து செல்லும் நிலை இப்போது உருவாகி உள்ளது.

ஏ.அபிபுன்னிசா (சமூக சேவகர்)
பத்து ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த நிலைமை இப்போது மாறியிருக்கிறது. இப்போது பெண்களுக்கு இருக்கும் சட்டம், சலுகைகளை பயன்படுத்தி முன்னேறலாம். அதை தவறாக பயன்படுத்தக் கூடாது.

பி.ஹேமமாலினி (தேசிய கடற்கரை கைப்பந்து வீராங்கனை)
ஆண்களுக்கு இணையாக விளையாட்டுத் துறையில் சாதிக்கிறோம். ஆனால், ஆண்களுக்கு உள்ளது போன்று எல்லாத் துறையிலும் பெண்களுக்கு விளையாட்டு இடஒதுக்கீடு இல்லை.

பிரசன்னா
(பெண் வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர்)
பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் அதிகரிப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. திருமணம் என்ற பெயரில் வெளிநாடுகளுக்கு பெண்களை கடத்துவதும் தொடர்கின்றன.

டி.பானுமதி (இல்லத்தரசி)
கிரைண்டர், வாஷிங்மெஷின், மிக்சி, மைக்ரோஓவன், காஸ் ஸ்டவ் என்று நாங்கள் ரொம்பவே முன்னேறியிருக்கிறோம். அவ்வளவுதான்.

பெண்களுக்கு எதிரான குற்றங்கள்

குற்றம் 2003    2004    2005    2006    2007

பாலியல் பலாத்காரம் 15847    18233    18359    19348    20737

கடத்தல் 13296    15578    15750    17414    20416

விபச்சாரத்திற்கு கடத்தல் 5510    5748    5908    4541    3568

வரதட்சணை பலி 6208    7026    6787    7618    8093

சித்ரவதை செய்தல் 50703    58121    58319    63128    75930

பாலியல் தொந்தரவு 32939    34567    34175    36617    38794

பாலியல் வன்முறை 12325    10001    9984    9966    10950

வரதட்சணை கொடுமை 2684    3592    3204    4504    5623

மொத்தம் 139512    152866    152486    166136    184051

தமிழகத்தில்...

குற்றம் 2007    2008    2009

பாலியல் பலாத்காரம் 523    573    596

வரதட்சணை பலி 208    207    194

பாலியல் தொல்லை 1558    1705    1242

பாலியல் வன்முறை 875    974    501

சித்ரவதை செய்தல் 1976    1648    1460

கடத்தல் 1097    1155    1133

வரதட்சணை கொடுமை 368    262    207

தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மீது தொடரப்பட்டுள்ள வழக்குகள் எண்ணிக்கை விவரம்:

2003    4952
2004    4833
2005    5064
2006    3789
2007    6605
2008    6524
2009    5333

No comments:

Post a Comment