Total Pageviews

Monday 20 February 2012

கொஞ்சம் துறவு...




கொஞ்சம் துறவு...
அப்துல் அஜீஸ் பாகவி




[ நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள், இந்த உலகில் ஒரு வழிப்போக்கனைப் போல நடந்து கொள். காலையில் விடியும் போது மாலை நிச்சயம் வரும் என்று எதிர்பார்க்காதே! மாலை மங்கும் போது காலை புலரும் என்று எதிர்பார்க்காதே! ஆரோக்கியம் இருக்கிற போதே நோய்க்காலத்தின் தேவையை கருத்தில் கொண்டு
நடந்து கொள். வாழ்கிற போது மரணத்தினை கருத்தில் கொண்டு வாழ்ந்து கொள். இந்த மனப்பான்மையை உள்ளத்தில் தகுந்த இடத்தில் உட்கார வைத்து விட்டால் பிறகு துறவுக்காக அவசியத் தேவைகள் எதையும் துறக்க வேண்டியிருக்காது.


அதே நேரத்தில் அநாவசியமான, அத்துமீறிய செயல்கள் அனைத்தும் தானாக துறவு பூண்டு விடும். ஒரு திருமணத்திற்காக 10 கோடி செலவழிக்க முடியும் என்ற நிலையில் உள்ள ஒரு செல்வந்தர் சில லட்சங்களில் விரயம் இன்றி அத்திருமணத்தை முடித்துவிடுவாரானால் அவரும் ஒரு துறவி தான்.]


''ஆடம்பரமாக வாழாதீர்கள். அதீத செலவினத்தை தவிருங்கள்' என்று சொன்னவர் யார்?'' ஓரு வார இதழில் இப்படி ஒரு புதிர் போடப் பட்டிருந்தது. பதிலை தேர்ந்தெடுக்க வசதியாக நான்கு பெயர்களை குறிப்பிடிருந்தார்கள். தாயுமானவர், புத்தர், நபிகள் நாயகம், மன்மோகன் சிங். என்ற அந்த நான்கு பெயர்களையும் படித்து விட்டு நான் நபிகள் நாயகம் என்பதை தேர்வு செய்தேன்.


அது சரிதானா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள அந்த பத்திரிகையை தலைகீழாக திருப்பி சரியான விடைகளை பார்வையிட்ட போது அங்கே, ஒரு ஆச்சரியம் காத்திருந்தது. விடை நான் நினைத்தது இல்லை. இதைச் சொன்னவர் இந்தியப்பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்.


ஒரு அரசியல்வாதி தேர்ந்த ஒரு மதகுருவைப் போல நாட்டு மக்களுக்கு உபதேசம் செய்வது, அதுவும் சமயம் மதம் என்பதெல்லாம் ஒரு அலங்காரத்திற்கு வைத்துக் கொள்ளத்தக்கது அவ்வளவுதான் என்ற எண்ணம் மோலோங்கியிருக்கிற காலத்தில் இப்படி ஒரு அறிவுரையை சொல்லியிருப்பது ஒரு ஆச்சரியம் தானே?


நமது பிரதமர், அதுவும் முதலாளித்துவ மனோபாவம் கொண்ட ஒரு பொருளாதார நிபுணர், திடீரென ஒரு மதகுருவின் குரலில் பேச வேண்டிய அவசியம் என்ன நேர்ந்த்தது? வேறோன்றும் இல்லை!


ஒரு பக்கம் இந்திய ரூபாயின் மதிப்பு உயர்ந்திருக்கிறது. மற்றொருபுறம் அதன் வாங்கும் திறன் குறைந்த்திருக்கிறது. இந்தியப் பொருளாதாரத்தில் இப்போது ஒரு வித்தியாசமான சூழல் நிலவுகிறது.இந்தியப் பொருளாதாரம்
வளர்ச்சி நிலையில் இருக்கிறது. முன்பு ஒரு அமெரிக்க டாலரைப் பெருவதற்கு 50 ரூபாய் கொடுக்க வேண்டியிருந்தது. இப்போது 46 ரூபாயுக்கு ஒரு டாலரைவாங்க முடியும். அந்த வகையில் இந்திய ரூபாயின் மதிப்பு
உயர்ந்திருக்கிறது.


இதன் பலன் நாட்டு மக்களுகுகு கிடைத்திருக்கும் என்றால் முன்னர் ஒரு ரூபாயுக்கு கிடைத்த சாக்லேட் 90 காசுக்கு கிடைக்க வேண்டும் ஆனால் நிலமைவேறு மாதியிருக்கிறது. ஒரு ரூபாய் சாக்லெட் இபோது ஒண்ணரை ரூபாயாக ஆகிவிட்டது. 60 ரூபாய்க்கு கிடைத்த சமையல் எண்ணை 90 ரூபாயாகிவிட்டது. 36 ரூபாய்க்கு கிடைத்து வந்த துறையூர் அரிசி இப்போது 41 ரூபாயாகிவிட்டது. இரும்பு விலை 56 சதவீதம் உயர்ந்திருக்கிறது.


கம்ப்யூட்டர் மற்றும் ஐ.டி துறையின் வளர்ச்சியால் கார் பங்களா என வாழ்கை வசதிகள் பெருகி.. இலட்சக் கணக்கினாலான பணம் சாமான்ய நடுத்தர வர்கத்து
மக்களிடம் புரள.. சிற்றூர்களிலும் கூட ஷாப்பிங் மால்களும் உயர் ரக காப்பி ஷாப்புகள் மிளிர நாடு பொருளாதாரத்தில் வளர்ச்சி கண்டுள்ளதை மக்கள்
தங்களது வாழ்வியல் போக்கில் அனுபவித்து உணர்ந்து கொண்டிருந்த சூழலில் இந்த பணவீக்கம் ஒரு திடீர் அதிர்ச்சியையும் எச்சரிக்கையையும்
ஏற்படுத்தியிருக்கிறது அந்த எச்சரிக்கைதான் டாக்டர் மன்மோகன் சிங் அவர்களை இப்படி பேச வைத்திருக்கிறது.


ஒரு துறவியை போல அவர் பேசுகிறார் என்று சிலர் நையாண்டி செய்கிறார்கள். உண்மை தான். ஆனால் இந்தத் துறவு இன்றைய இந்திய தேசத்தின் தேவை என்பதை நாட்டு மக்கள் உணர வேண்டும்.


இந்தியாவிலும் சீனாவிலும் ஒரு புதிய வகை பணக்கார வர்க்கம் வேகமாக வளர்ந்து வருகிறது. அதிக சிரமம் அல்லது துணிச்சலான முயற்சி எதையும் மேற்கொள்ளாமலே ஒரு கனிசமான தொகையினர் பெரும் செல்வந்தர்களாகி வருகினறனர். குறிப்பாக இளைஞர்களும் இளைஞகளும் கல்வித்தகுதி ஒன்றை மட்டுமே மூலதனமாக கொண்டு பெரும் பொருள் ஈட்டிவருகினறனர். அவர்களிடம் ஆடம்பர மோகம் அதிகமாகஇருக்கிறது. 5 ரூபாய்க்கு கிடைக்கிற காப்பியை தவிர்த்துவிட்டு 50 ரூபாய்க்கு காப்பி குடிப்பதை தேர்வு செய்கின்றனர். ஒரு பகுதியில் இத்தகைய வாடிக்கையாளர்கள் பெருகுகிற போது அந்தப் பகுதியில் காப்பியின் விலை கணிசமாக உயர்ந்து விடுகிறது. சாதாரண பெட்டிக் கடை வைத்திருப்பவ்ர் கூட சில பிளக்ஸ் அட்டைகளையும் கண்ணாடி அலங்காரங்களையும் செய்வதன் மூலம் இரண்டைரை ரூபாய் டீயை 10 ரூபாய்க்கு விற்கிறார். அதைப் பற்றி யாரும் கேட்டுக் கொண்டிருக்க மாட்டார்கள்.


நான் துபாய் சென்றிருந்த போது ஒரு நாள் டீ கடைக்காரர் இன்று முதல் டீயின் விலை 6 திர்ஹம் என்றார். உடன் வந்த நண்பர் கடைக்காரரிடம் எதற்கப்பா இந்த விளையாட்டு இன்னும் ஓரிரு நாளில் நீயே விலையை குறைத்து விடுவாய் என்றார். இல்லை. இல்லை. இந்த முறை விலை குறைக்கப்படாது என்றார்
கடைக்காரர். பார்க்கலாம் என்று சொல்லி விட்டு நண்பர் திரும்பினார். என்ன விசயம் என்று நான் நண்பரைக் கேட்டேன். இங்கு அவ்வப் போது டீ கடைக்காரர்கள் இப்படி டீ விலையை உயர்த்துவார்கள். இங்குள்ள உழைக்கும்
மக்கள் தான் இது போன்ற கடைகளில் டீ குடிப்பார்கள். அவர்களுக்கு டீ ஒரு திர்ஹம் என்பது பெரிய தொகை. அதனால் டீ விலையேற்றத்தை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். டீ குடிப்பதை குறைத்து கொள்வார்கள்.


வியாபாரம் குறைவதைப் பார்த்து கடைக்காரர்கள் மீண்டும் பழைய விலைக்கே விற்க ஆரம்பித்து விடுவார்கள். இது இங்கு அவ்வப் போது நடக்கிற நாடகம் தான் என்று நண்பர் சொன்னார். துபாயின் டீ விலையை போல இல்லாமல் நமது நாட்டில் ஒரு பொருளுக்கு விலையேறிவிட்டால் பிறகு அது இறங்குவதே இல்லை, இந்தியாவில் பெருகி வரும் ஆடம்பர மோகத்தால் உயர்கிற பொருட்களின் விலை, ஆடம்பரக்கடைகளை தொடர்ந்து சாமான்யக் கடைகளையும் தொற்றுகிறது.


சென்னையில் ஒரு சைவ ஹோட்டலில் மதிய சாப்பாடு 225 ரூபாய். இதற்கும் அது ஸ்டார் அந்தஸ்துள்ள ஹோட்டல் அல்ல.சற்றுவித்தியாசமாக்கப்பட்டுள்ள ஒரு ரெஸ்ட்டாரெண்ட் அவ்வளவே! ஆனாலும் கூட்டம் நிரம்பி வழிகிறது. பெயரைப் பதிவு செய்துவிட்டு வரிசையில் காத்திருந்து சாப்பிடுகிறார்கள்.


இந்தப் புதிய ஆடம்பரக் கலாச்சாரம் ஒவோர் விசயத்திலும் தொடர்கிறது. அது பொருட்களின் விலை உயர்வுக்கு காரண்மாகிறது. இந்தியாவிலும் சீனாவிலும்
இத்தகை ஆடம்பரக் கலாச்சாரத்திற்கு புதிதாக ஆட்பட்டோரின் எண்ணிக்கை பெருகிவிட்ட காரணத்தினால் தான் உலக அளவில் உணவுப் பொருட்களின் விலை உயர்ந்து விட்டதாக வெள்ளை மாளிகை உணவு அறிக்கையை வெளியிட்டது. ஒரு பெரிய பொருப்பில் இருக்கும் ஆட்சித் தலைவர் ஒருவர் சம்பந்தமில்லாமல் ஒரு காரணத்தை சொல்ல முடியாது. அதிலும் குறிப்பாக பொருளாத விசயத்தில். எனவே அமெரிக்க அதிபர் கூறும் காரணம் புறக்கணித்தக்க ஒன்றல்ல. அதனால் தான் டாக்டர் மன்மோகன் சிங் அமெரிக்க அதிபரின் குரலை, வெளியுலகம் சற்றென்று புரிந்து கொள்ள முடியாதவாறு சற்று மாற்றி, குற்றம் சாட்டாமல் அறிவுரையாக கூறியுள்ளார். ஆடம்பரமாக வாழாதீர்கள்.


இந்த அறிவுரை முஸ்லிம்களுக்கு புதிதல்ல.


இஸ்லாமின் பொருளாதார வழிகாட்டுதலில் இந்த இரண்டு அறிவுரைகளும் பிரதானமானவை.


இஸ்லாம் முஸ்லிம்களிக்கு கற்றுக் கொடுக்கிற பண்புகளில் ஜுஹ்து என்ற துறவு மனப்பான்மை பிரதானமானது. வீடுவாசலைத் துறந்து காட்டிலே கடுந்தவம் புரிபவர்களிடம் மட்டுமல்ல ஒவ்வொரு மனிதனிடமும் இந்த ஜிஹ்து துறவு மனப்பான்மை இருக்க வேண்டும் என்று இஸ்லாம் கூறுகிறது. 


ஒரு மனிதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து இறைவனும் மக்களும் என்னை நேசிக்க வேண்டுமெனில் நான் என்ன செய்ய வேண்டும் என்றுகேட்டார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னார்கள். துறவு கொள் இறைவனும் மக்களும் உன்னை நேசிப்பார்கள் என்று பதிலளித்தார்கள். (இப்னுமாஜா)


துறவு என்ற வார்த்தைக்கு உலகில் பிரதானமாக அறியப்படுகிற பொருள் ஒன்று உண்டு. பஞ்சு மெத்தையில் படுக்காமல் கட்டாந்தரையில் படுப்பது துறவு. வண்ணவண்ணமான ஆடைகளை அணியாமல் ஒரு குறிப்பிட்ட வகை ஆடை அணிவது துறவு. ருசி ருசியானஉணவுகளை உண்ணாமல் ருசிகளற்ற உணவை உணப்து துறவு. சம்பாத்திக்கச் செல்லாமல் பிச்சை எடுத்து உண்பது துறவு,குடும்பமாக வாழாமல் தனிமனிதனாக வாழ்வது துறவு என்று துறவுக்கு உலகம் ஒரு பொருளை கொண்டிருக்கிறது. அந்தப் பொருள் இறை வேதங்கள் எதுவும் கொடுத்த பொருள் அல்ல. சில போலி சம்ய வாதிகள் மக்களிடம்
அனுதாபத்தையும் தனி மரியாதையையும் பெறுவதற்காக தாங்களே உருவாக்கிக் கொண்டதாகும். திருக்குரான் இந்த உண்மையை பிட்டு வைக்கிறது.


உண்மையில் வேதங்கள் கற்றுக் கொடுக்கும் துறவு இதுவல்ல. உண்மையான சமயத் தத்துவங்கள் கூறும் துறவு என்ன என்பதை இஸ்லாம் வெளிப்படுத்துகிறது. இந்த உலகில் காணப் படும் நல்ல இன்பங்களை அனுபவித்துக் கொண்டு அதில் எல்லை மீறாமல் நடந்து கொள்ள வேண்டும். இது தான் இஸ்லாம் கற்றுத்தருகிற துறவு மனப்பான்மையாகும். ஏ.சி அறையில் தண்ணீர்ப் படுக்கையில் படுத்திருக்கும் ஒருவர் இது இறைவன் தனக்கு கொடுத்திருக்கும் அருள். இறைவன் நாடிவிட்டால் இது என்னிடமிருந்து நாளைக்கே பறிக்கப் படலாம் என்ற உணர்வை உள்ளத்திலே கொண்டு அதற்கேற்ப நடந்து கொள்வாரானால் அவரும் துறவிதான்.


நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள், இந்தஉலகில் ஒரு வழிப்போக்கனைப் போல நடந்து கொள். காலையில் விடியும் போது மாலைநிச்சயம் வரும் என்று எதிர்பார்க்காதே! மாலை மங்கும் போது காலை புலரும் என்று எதிர்பார்க்காதே! ஆரோக்கியம் இருக்கிற போதே நோய்க்காலத்தின் தேவையைகருத்தில் கொண்டு நடந்து கொள். வாழ்கிற போது மரணத்தினை கருத்தில் கொண்டு
வாழ்ந்து கொள்.


இந்த மனப்பான்மையை உள்ளத்தில் தகுந்த இடத்தில் உட்கார வைத்து விட்டால் பிறகு துறவுக்காக அவசியத் தேவைகள் எதையும் துறக்க வேண்டியிருக்காது. அதே நேரத்தில் அநாவசியமான, அத்துமீறிய செயல்கள் அனைத்தும் தானாக துறவுபூண்டுவிடும். ஒரு திருமணத்திற்காக 10 கோடி செலவழிக்க முடியும் என்ற நிலையில் உள்ள ஒரு செல்வந்தர் சில லட்சங்களில் விரயம் இன்றி அத்திருமணத்தை முடித்துவிடுவாரானால் அவரும் ஒரு துறவி தான்.


எந்த ஒரு இடத்திலும் தேவைக்கு அதிகமாக செலவழிப்பது
ஆடம்பரமாகும்.ஆடம்பரத்தை தவிர்த்துக் கொள்ளும் ஒவ்வொருவரும் துறவிதான். ஆடம்பரம் இஸ்லாம் பெரிதும் வெறுக்கிற விஷயம். ஆற்றின் கரையிலிருந்து முகம் கழுவுகிற போது கூட தேவைக்கு அதிகமாக தண்ணீரை உபயோகிப்பதை இஸ்லாம் தடுக்கிறது.


தேவையானதை தேவையான விதத்தில் சாப்பிடவும் பருகவும் அனுமதிக்கிற திருக்குர்ஆன் விரயம் செய்துவிடாதீர்கள் என்று எச்சரிக்கிறது.


விரயம் செய்பவர்களை இறைவன் விரும்புவதில்லை என்று திருக்குர்ஆன் பலஇடத்திலும் திரும்பத்திரும்பக் கூறுகிறது.


இறைவனது விருப்பம் சாராத எதிலும் நன்மை இருக்க முடியாது. ஒவ்வொருதனிமனிதனும் யோசிக்க வேண்டிய விசயம் இது.


தனிப்பட்ட வாழ்வில், விழாக்களில், பெருமைக்காக செய்யப் படுகிறஆடம்பரங்களில் பெரிதாக எந்த நன்மையும் ஏற்படுவதில்லை.


ஒரு திருமண விழாவில் வாரியிறைக்கப்படுகிற ஆடம்பரச் செலவுகளால் அந்த மணமக்களின் வாழ்வில் மகிழ்ச்சி கூடிவிடப் போவதில்லை.


ஆடம்பரத்தால் நல்ல வாழ்கை தந்துவிடமுடியுமென்றால் இங்கிலாந்தின் இளவரசர் சார்லஸூம் டயானாவும் பிரிந்திருக்கவே முடியாது, எனென்றால் 20 ம் நூற்றாண்டின் மிக ஆடம்பரமாக நடைபெற்ற திருமணம் அது,


ஆடம்பரமாக வாழாதீர்கள் அது இறைவனது விருப்பத்திற்குரியது அல்ல எனபது இதுவரை சமயவாதமாக இருந்தது. இப்போதோ ஆடம்பரமாக வாழாதீர்கள் ஆடம்பரத்தால் உலகில் விலைவாசி உயரும், ஒரு சிலர் செய்கிற ஆடமபரம் ஒட்டு மொத்த உலகின் நலனையும் பாதிப்புக்குள்ளாகும் என்பது பொருளாதார தத்துவமாக மாறியிருக்கிறது இருக்கிறது.


டாக்டர் மன்மோகன் சிங்கின் இரண்டாவது அறிவுரை அதீத செலவினத்தை தவிருங்கள் என்பது. அதாவது கண்ணில் கண்டதை எல்லாம் வாங்கிக் குவிக்காதீர்கள் என்கிறார். முன்பெல்லாம் குடும்பத்தலைவர்களும் தலைவிகளும் வீட்டுக்கு என்ன தேவை என்பதை எழுதி எடுத்துக் கொண்டு போய் கடைகளில் வாங்கி வருவார்கள். இப்போதை ஷாப்பிங் மால் கலாச்சாரத்தில் கண்ணில் தெரிவதை எல்லாம் வாங்கிக் குவிக்கிற பழக்கம் ஏற்பட்டு விட்டது. ஒவ்வொருஷாப்பிங்கின் போதும் ஒரு புதிய பொருள் வீட்டுக்கு வருகிறது, இது தேவையானதுதானா எனபது சரியாக யோசிக்கப் படுவதில்லை. கவர்ச்சியான விளம்பரங்கள் அல்லது இலவசங்களின் தாக்கம் அந்த யோசனையைத் தடுத்துவிடுகிறது. இதுவும் விலைவாசி உயர்வுக்கு ஒரு முக்கியக் காரணம் என்கிறார் மன்மோகன்சிங்.


நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு வீட்டில் எத்தனைபடுக்கைகள் இருக்கலாம் என்பதை சொல்லுகிற போது. குடும்பத் தலைவருக்கு ஒரு படுக்கை, அவரது மனைவிக்கு ஒரு படுக்கை. விருந்தாளிக்கு ஒரு படுக்கை இருக்கலாம். (தேவையற்று இருக்கும்) நான்காவது படுக்கை சாத்தானுக்குரியது என்றார்கள். (அறிவிப்பாளர்: ஜாபிர் ரளியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம்)


தேவையற்றைத வாங்கிக் குவிப்பதை சாத்தானிய குணம் என சம்யங்கள் வர்ணித்தன. அதையே விலைவாசி உயர்வுக்கான மற்றொரு காரணம் என இப்போது டாக்டர் மன்மோகன்சிங் கூறுகிறார்.


ஒருவர் தேவையின்றி ஒரு பொருளை வாங்கினால் அது அவருடைய பர்ஸை மட்டும் பாதிக்கிற விசயமல்ல. நாட்டுப் பொருளாதாரத்தின் பல்ஸையும் பாதிக்கிறது என்று கவலைப் படுகிறார் டாக்டர் மன்மோகன் சிங்.


இப்போதைக்கு பிரதமர் துறவியாகியிருக்கிறார். நீங்களும் கொஞ்சம் துறவியாக முயறிசி செய்யுங்கள். இந்த தேசமும் ''அந்த'' தேசமும் வளம் பெறும்.அடுத்த முறை உங்களது பர்ஸை திறக்கிறபோது. இந்த ஈமானியத் துறவு முதலில் தலையை காட்டடும்.

No comments:

Post a Comment